ஊரில் ஆடு திருடி விற்கும் நாயகன் ஆடு திருடும்போது கால் உடைந்து விட நாயகி காப்பாற்றுகிறார் ஆனால் அவள் பூர்விகத் தொழில் மாய மந்திரம் செய்வது. இந்த சூழ்நிலையில் ஊரில் ஒரு பெரிய மனிதர் கொலை செய்யப்படுகிறார். அவர் கொலைக்கு காரணம் அவர் சொத்துக்காக ஆசைப்படும் சொந்தக்காரன்.
கொலையாளி யார் என்று கண்டுபிடிக்கும் காவல் ஆய்வாளர் கொலையை மறைக்க பேரம் பேசி முடித்து, யாராவது சரணடைய சொல்லுங்கள் என்று சொல்ல, கொலை செய்த கூலி ஆட்கள் திருதிரு என்று முழிக்க ஆடு திருடும் நாயகனை மாட்டிவிடும் நோக்கில் அவனைத் தேடுகின்றனர்.
நாயகனை காதலிக்கும் நாயகிக்கு அவளின் மந்திரவாதி பாட்டி எதிர்த்து நிற்க, ஆடு திருடும் நாயகனை ஊரைவிட்டு அனுப்பிவிட, சொந்த ஊருக்கு சென்ற நாயகன், தன் வீட்டை விட்டு வெளியேறி நாயகியை மணமுடிக்க வரும்போது ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. அது என்ன பாருங்கள் மையல்..
நாயகன் சேது. இவர் மைனா படத்தில் ஒரு சிறந்த கதாபாத்திரத்தில் தோன்றியவர். அதன் பிறகு மையல் படம் மூலம் நாயகனாக வலம் வருகிறார். தமிழ் கதாநாயகனுக்குரிய பரட்டை முடி, தாடி, லுங்கி என அனைத்து அந்தஸ்துகளையும் ஒருங்கிணைத்து ஒரு நாயகனாக நம் முன் வருகிறார். ஆனால் தன் நடிப்பில் எந்த ஒரு சிறப்பம்சமும் இல்லாததால் இவரை நாயகனாக ஏற்றுக்கொள்ள நம்மால் இயலவில்லை.
நாயகி இவர் ஏன் கதாநாயகனை காதலிக்கிறார் என்பது நமக்கு புரியாத புதிராக இருக்கிறது. அதற்கு இவர் சொல்லும் காரணங்கள் குழந்தைகளுக்கு பூச்சாண்டி கதை சொல்வது போல் தெரிகிறது. படத்தில் காட்சிப் பிழைகள் அதிகம். திரைக்கதை ஓட்டம் ஒரு தெளிவில்லாமல் அது போக்கில் போகிறது. அது ஏன் என்று இயக்குனர் தான் சொல்ல வேண்டும்.
மையல் என்ற வார்த்தைக்கு தமிழ் அகராதியில் ஏகப்பட்ட அர்த்தங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த மையல் படத்தில் என்ன இருக்கிறது என்பதை தெளிவுபடுத்தாமல் இருக்கிறார் இயக்குனர்.
மையல் – தமிழ் படத்தின் எண்ணிக்கையில் இது ஒன்று