அப்பா மற்றும் மகன் இருவரது வாழ்க்கை மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்று இரண்டு கதைகள்.
நாயகன் ரங்கராஜ். இவர்தான் இயக்குனரும். இவருக்கு இரு வேடங்கள். படத்தின் துவக்கத்தில் மனைவியை பிரசவத்துக்கு அழைத்து செல்லும்போது கொல்லப்படுகிறார். மகனை வளர்த்து ஆளாக்கும் தாய். ஒரு போலீஸ்காரன் தன்னை அவமானப்படுத்தியதால் அவனை கொலை செய்து தானும் மடிந்து விடுகிறாள்.
நாயகன் காவல்துறை அதிகாரியாக மாறி நேர்மையின் விடிவெள்ளியாக இருக்கிறார்.. ஒரு பெரிய மனிதரை பகைத்துக் கொண்ட காரணத்தால் அவரின் மனைவி கொல்லப்படுகிறார், அதற்கு பழி வாங்க நாயகன் ரங்கராஜ் முற்படும்போது தன தந்தையின் கொலையின் பின்னணி தெரிய வருகிறது. அது என்ன ? பாருங்கள் கட்ஸ்..
‘கட்ஸ் என்ற பெயருக்கு துணிவு என்ற அர்த்தம் வரும். அது போல் நேர்மையின் சிகரமாக வலம் வரும் நாயகன் சந்திக்கும் சோகங்களை, இழப்புகளை நம் முன் கொண்டு வருகிறார் நாயகன் ரங்கராஜ். மூன்று வித கெட்டப்புகளில் மிக அழகாக வருகிறார். முதலில் சண்டியராக, பிறகு காவல்துறை அதிகாரியாக, பிளாஷ்பேக்கில் வாலிப பருவம் மூன்றிலும் முப்பரிமாணங்களில் அழகாக தன் கதாபாத்திரத்தை செய்திருக்கிறார் நாயகன்.
தந்தையின் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக வரும் சுருதி நாராயணன் சிறப்பு. மகனின் ஜோடியாக வரும் நான்சி அழகு பதுமை. சாய் தீனா குணச்சித்திர கதாபாத்திரம். மறைந்த டெல்லி கணேஷ் இந்த படத்தில் மூத்த காவலராக நடித்திருக்கிறார்.
இயக்குனரும் கதாநாயகனும் ஒருவரே என்பதால் தனக்கு என்ன வரும் என்பதை தெரிந்து திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார்.
இறுதியில் நாட்டின் விவசாயம் அழிக்கப்படுவதை கதையின் மையக்கருவாக கொண்டு செல்வதால் இவரின் தேசப்பற்று நமக்குத் தெரிய வருகிறது.
‘கட்ஸ்’ – இவன் பழிவாங்க பிறந்தவன்