தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தானா, பாக்கியராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்து இருக்கும் படம் குபேரா.
படம் என்ன சொல்ல வருகிறது ? படத்தின் தலைப்பை பார்த்தவுடன் நமக்கு புரிந்து இருக்கும்
குபேரன் யார் ? ஒட்டுமொத்த பணத்திற்கும் சொந்தக்காரன். அந்த பணம் குபேரனிடம் மட்டும் இருக்குமா ? பிச்சைக்காரனிடம் அந்த பணம் இருக்காதா என்ற ஒரு கற்பனையை ஒரு திரைப்படமாக்கி அது வெற்றி படமாக தந்திருக்கிறார் இயக்குனர் சேகர் கம்முலா.
மத்திய அரசின் எரிவாயு திட்டத்திற்காக லட்சம் கோடி லஞ்சம் கொடுத்து எரிவாயு திட்டத்தை தனக்கு சொந்தமாக்கிக் கொள்ள நினைக்கிறார் வில்லன். அதற்கான செயல்பாடுகளை செய்ய சிறையில் இருக்கும் முன்னாள் சிபிஐ அதிகாரி நாகார்ஜுனாவை சிறையிலிருந்து அழைத்து வந்து அவர் மூலம் திட்டத்தை தொடங்குகிறார். லஞ்சப் பணம் எப்படி யார் மூலம் கொடுக்கலாம் என்ற சந்தேகத்திற்கு நாலு அப்பாவிகளை தொழிலதிபராக்கி தனுஷ் உட்பட அவர்கள் மூலம் தங்கள் காரியத்தை சாதித்து நால்வரையும் கொலை செய்து விட முயற்சிக்கும்போது கதாநாயகன் தனுஷ் தப்பி விடுகிறார்.
அவர் கிடைத்தால் மட்டுமே எரிவாயு திட்டத்தின் மற்ற விஷயங்கள் நடக்கும். அவரை தேடி நாகார்ஜுனா செல்ல, பின்னர் என்ன நடக்கிறது என்பதே குபேரா படத்தின் அடுத்த நகர்வு.
தனுஷ் தற்போதுள்ள தமிழ் திரையுலகில் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு பிறகு தன்னை வருத்தி கதாபாத்திரத்துக்குள் உள் நுழையும் நடிகனாக மாறுவதில் முதலிடத்தில் இருக்கிறார்.
இவரின் மாறுபட்ட கதாபாத்திரத்தை நாம் பார்த்து இருந்தாலும் பிச்சைக்கார கதாபாத்திரம் இவரின் திரை உலக வரிசையில் நிச்சயம் மறக்க முடியாத இடத்தை பிடிக்கும். பரட்டத் தலை, அழுக்குத் துணி, கரி பூசிய முகம் என கெட் அப் மட்டும் இல்லை, அவர் நடிப்பு தனுஷ் என்று தெரியாதவர்களுக்கு அவர் ஒரு ஒரிஜினல் பிச்சைக்காரர் தான் என்று நம்புவார்கள். அந்த அளவுக்கு வசன உச்சரிப்பில் இருந்து உடல் மொழி வரை தன்னை செதுக்கியிருக்கிறார் தனுஷ்.
பல்லாயிரம் கோடி தன் பெயரில் இருப்பதை அறியாத ஒரு மனிதன், அதைத் தெரிந்து அவர் முகத்தில் வரும் முக பாவங்கள் தனுஷுக்கே உரிய சிறப்பம்சம். நிச்சயம் இந்த திரைப்படம் தனுஷுக்கு ஒரு சிறந்த விருதை வாங்கித் தரும் என்பதில் ஐயமில்லை.
ராஷ்மிகா மந்தானா எதிர்பாராத இடத்தில் எதிர்பாராத சந்திப்பு .பிறகு நட்பு. வில்லன்களின் துரத்தலில் ஓடிக்கொண்டிருக்கும் தனுஷ் இருக்கு பின்புலம் இவரின் பல காட்சிகள் சென்சாரில் கட் செய்யப்பட்டதால் ஏமாற்றமே.
நாகார்ஜுனா ஒரு நேர்மையான சிபிஐ அதிகாரி. நேர்மையின் பரிசு சிறைவாசம். சிறையில் கற்ற கல்வி நேர்மையை தவிர். சட்டத்துக்கு புறம்பாக செல். அதன் பலன் வில்லனின் அறிமுகம். இவரின் வேகம் மற்றும் விவேகம் வில்லனுக்கு பலம். இன்னும் இளமை மாறாத நாயகனாக தான் நமக்கு தெரிகிறார் நாகார்ஜுனா. இவரின் நடிப்பை பற்றி நாம் சொல்ல வேண்டியது இல்லை. ரசிகனை எப்படி தன் பக்கம் இழுப்பது என்பது இவருக்கு கைவந்த கலை. அது நாயகனாக இருந்தாலும் சரி, எதிர் நாயகனாக இருந்தாலும் சரி.. நாகார்ஜுனாவுக்கு இணை நாகார்ஜுன மட்டுமே.
வில்லனாக ஜின் சர்ப். ஒரு மிகப்பெரிய செல்வந்தன் எப்படி இருப்பான் என்று நம் கற்பனைக்கு உருவம் கொடுத்திருக்கிறார். இவரின் வில்லத்தன நடிப்பு, கதாநாயகனை உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறது.
மற்றும் பாக்கியராஜ், நாசர், சுனைனா மற்றும் பலர் தங்கள் கதாபாத்திரங்களை அறிந்து சிறப்பு செய்திருக்கின்றனர்.
இசை தேவி ஸ்ரீ பிரசாத். இசையை இடியாாக மட்டுமல்ல இன்னிசையாகவும் தெறிக்க விட்டிருக்கிறார்
குபேரா- தனுஷ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்
ரேட்டிங்–👍👍👍👌👌👌