விஷ்ணு மஞ்சு, பிரபாஸ், ப்ரீத்தி முகுந்தன், மோகன் பாபு, மோகன்லால், சரத்குமார் மற்றும் பலர் நடிப்பில் பிரம்மாண்டத்தை மூலதனமாக்கி வெற்றி திரைப்படமாக வெளி வந்திருக்கும் படம் கண்ணப்பா, கதைக்களம் நாம் அனைவருக்கும் தெரிந்ததே, சிவனுக்கு கண் கொடுத்தவன் கண்ணப்ப நாயனார். அவரின் கதை தான் இந்த படம். ஆனால் கடைசி 20 நிமிடம் தான் கண் கொடுப்பது. இரண்டு மணி நேரம் 40 நிமிடம் படம் முழுக்க ஆக்சன் பிளாக் தான்..
தன் மகன் விஷ்ணு மஞ்சு ஒரு பிரம்மாண்ட நாயகனாக உருவெடுக்க தந்தை மோகன் பாபு கையில் எடுத்திருக்கும் ஆயுதம் தான் கண்ணப்பா. அதற்கு உறுதுணையாக பிரபாஸ் மோகன்லால். சரத் குமார் என பல உச்சர நட்சத்திரங்களை பக்க பலமாக்கி தன் மகளின் நாயகன் அந்தஸ்தை உயர்த்திய கண்ணப்பா படம் என்ன சொல்ல வருகிறது. ?
திண்ணனாக நடித்திருக்கும் விஷ்ணு மஞ்சுவின் அறிமுகக் காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்கிறது. திண்ணனின் மனதை கவரும் இளம் பெண்ணான நெமிலி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை பிரீத்தி முகுந்தன் போதும் போதும் என்ற அளவிற்கு கவர்ச்சியை காட்டி நடித்திருக்கிறார். அத்துடன் மறவாமல் சிவ பக்தையாகவும் நடித்து ரசிகர்களின் மனதில் தங்குகிறார்.
முதல் பாதியில் கதை மெதுவாக நகர்வதும் வழக்கமான காதல் காட்சிகளாக செல்வதும் ரசிகர்களை சோதிக்கிறது. மோகன்லாலின் திரை தோற்றத்திற்குப் பிறகு உற்சாகம் பெறும் திரைக்கதை.. பிரபாஸின் ருத்ர வடிவத்திற்கு பிறகு மேலும் வேகம் பெறுகிறது. அதனால் படத்தின் முதல் பாதியை விட இரண்டாம் பாதி ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாக அமைகிறது.
நியூசிலாந்து நாட்டின் இயற்கை வழங்கிய கொடையை ஒளிப்பதிவாளர் தன் அழகான கமெரா கண்களால் பதிவு செய்து, ரசிகர்களுக்கு வழங்கி, பாராட்டை பெறுகிறார். பாடல்கள் மற்றும் பின்னணி இசை பக்தி படத்திற்கான இசையாக இடம் பிடித்திருக்கிறது.
சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் அக்ஷய் குமார், மோகன்லால் ஆகியோரை விட பிரபாஸ் கவனம் ஈர்க்கிறார். இந்த மூவரையும் சிவனின் ரூபங்களாக இடம்பெறச் செய்திருப்பது நூறு சதவீத வணிக வெற்றிக்கான புத்திசாலித்தனம்
ஒளிப்பதிவாளர் ஷெல்டன் ஷாவின் கேமரா நியூசிலாந்தின் இயற்கை அழகையும் ஒரு கதாபாத்திரமாக திரைக்கதையோடு பயணிக்க வைத்திருக்கிறது. எது உண்மை, எது வி.எப்.எக்ஸ் என்று கண்டுபிடிக்க முடியாதபடி நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஷெல்டன் ஷாவ்.
ஸ்டீபன் தேவாஸி இசையும் பின்னணி இசையும் ஆரம்பம் முதல் இறுதி வரை பக்தியுடன் பயணிக்க வைத்திருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார்.
பாகுபலிக்கு பிறகு மிகுந்த பொருட் செலவில் எடுக்கப்பட்ட பிரம்மாண்டம் கண்ணப்பா. படம் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருக்கும் நிலப்பரப்பை நம் முன் காட்ட இந்தியாவில் இடம் இல்லாத காரணத்தால் பசுமை நிறைந்த நியூஸிலாந்தில் படமாக்கி இருக்கிறார்கள். படம் முழுக்க நம் கண்கள் பசுமைகளை தரிசிக்கிறது அதற்காகவே படக்குழுவினரை நாம் பாராட்டியாக வேண்டும்.
ரேட்டிங் -5/5