விமல், சாயா தேவி, எம்.எஸ் பாஸ்கர், இசக்கி கார்வண்ணன், எம்.சுகுமார், அருள்தாஸ், ஶ்ரீ ரஞ்சனி, மனோஜ்குமார், ஆதிரா, சேஷ்விதா, வி. ஆர்.விமல்ராஜ், மகேந்திரன், காதல் சுகுமார், ஆறு பாலா, வீரசமர், களவாணி கலை நடிப்பில் வந்திருக்கும் படம் பரமசிவன் பாத்திமா
திண்டுக்கல் அருகே இருக்கும் சிறுமலை அந்த மலைதான் இந்தப்படத்தின் கதைக்களம். மூன்று ஊர்கள் இருக்கின்றன.. ஒன்று ‘சுப்ரமணியபுரம்’. இன்னொன்று ‘யோகோபுரம்’.. இன்னொன்று ‘சுல்தான்புரம்’.. இதில் ‘சுப்பிரமணியபுரம் தான் முதலில் அனைத்து மக்களும் ஒன்றாக வாழ்ந்து இருந்தபோது இருந்திருக்கிறது. கிறிஸ்துவ மதமாற்றத்தின் சார்பாக ஊரில் பிளவு ஏற்படுகிறது. பிளவின் காரணமாக பிரச்சனை. விளைவு கொலைகள். கொலைக்கான காரணம் என்ன ? பாருங்கள் பரமசிவன் பாத்திமா.
மக்களிடத்தில் மதம் தொடர்பான நம்பிக்கை- மதமாற்றம்- மதமாற்றத்தின் பின்னணி- என தென் தமிழகத்தில் உள்ள மக்களின் தற்போதைய சமூக அரசியல் குறித்தும், மத அரசியல் குறித்தும்.. இயக்குநர் ஓரளவு ஜனரஞ்சகமான முறையில் சொல்ல முயற்சித்திருக்கிறார். படத்தின் முதல் பாதி ஒரு கோணத்திலும்…. இரண்டாவது பாதி மற்றொரு கோணத்திலும் இருப்பது படத்தின் பலவீனம்.
இரண்டாம் பாதியில் பரமசிவன் பாத்திமா இடையேயான காதலும், அவர்களின் மதம் குறித்த நம்பிக்கையும் காட்சிகளாக விவரித்திருப்பது ஒரு பக்க சார்பு நிலையை அப்பட்டமாக விவரிக்கிறது.
பரமசிவன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விமல், பாத்திமா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாயாதேவி ஆகியோர்களை விட பாத்திமாவின் தோழியான ஜெனிபர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை சேஷ்விதா – காந்த கண்களாலும், கட்டற்ற இளமையாலும் ரசிகர்களை எளிதில் கவர்கிறார்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் தயாரிப்பாளரும் , இயக்குநருமான இசக்கி கார்வண்ணன் தனக்கு தெரிந்த விடயங்களை நடிப்பில் முயற்சித்திருக்கிறார்.
கிறித்துவ பாதிரியாராக நடித்திருக்கும் எம். எஸ். பாஸ்கர் இயக்குநர் சொன்னதை செய்திருக்கிறார்.
வில்லனாக அறிமுகமாகி நடிப்பில் கவனம் செலுத்தியதால் ஒளிப்பதிவாளர் சுகுமார் ஒளிப்பதிவில் தன் தனித்துவத்தை முன்னிறுத்தவில்லை. தீபன் சக்கரவர்த்தியின் பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்களுக்கு ஓரளவு ஆறுதல்.
படத்தில் எல்லா கதாபாத்திரங்களும் பிரச்சார பாணியிலேயே உரையாடல்களை நிகழ்த்துவதால் ரசிகர்களுக்கு எரிச்சல் ஏற்படுகிறது.
மத அரசியல் – மதமாற்ற அரசியல் குறித்து தான் புரிந்து கொண்டதை படைப்பாக வழங்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர்.