spot_img
HomeNewsநடிகர் பார்த்திபன் சென்னை மாநகராட்சிக்கு நன்றி தெரிவித்தார்

நடிகர் பார்த்திபன் சென்னை மாநகராட்சிக்கு நன்றி தெரிவித்தார்

அன்பான வணக்கங்கள்

கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில், இந்திய பனோராமா பிரிவில் எனது படம் ‘ஒத்த செருப்பு – சைஸ் 7’ தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்பட்டது எனக்கு மகிழ்ச்சியை தந்தது என்றாலும், அதையும் மீறிய ஒரு பெருமகிழ்ச்சிக்கு காரணம், இன்றைய செய்திதாள்களில் இடம் பெற்றிருந்த ஒரு முக்கிய செய்தி . அது விவசாயிகளின் துயர் துடைக்கும் வகையில், மாநகராட்சி நடைமுறைபடுத்த உள்ள ஒரு திட்டத்தைப் பற்றி மாநகராட்சி ஆணையர் வெளியிட்டிருந்த ஒரு செய்தி. சென்னை மாநகரின் திடக்கழிவுகளில் இருந்து, கரிம உரங்களை பெரிய அளவில் உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு வழங்கும் திட்டம் தான் அது.

விவசாயம் குறித்த எனது நேரடி அனுபவங்களையும், உரவிலை உயர்வால் விவசாயிகள் அடைந்து வரும் துன்பத்தையும் கருத்தில் கொண்டு, கடந்த 2015ம் ஆண்டில், நான் ஒரு வரைவுத் திட்டத்துடன் மாநகராட்சி தலைமை அலுவலகத்தை அணுகி, அவர்களுடன் இதன் நன்மை தீமைகள், நடைமுறை சிக்கல்கள் ஆகியன குறித்து ஆழமாக விவாதித்து, விரைவில் பெரிய அளவில் ஒரு இயற்கை உர தொழிற்சாலை அமைத்திட முயற்சிகள் மேற்கொண்டேன். இதன் மூலம், சென்னையை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் இருக்கும் விவசாயிகளுக்கு உரங்களை இலவசமாக வழங்கிட முடியும், வேண்டும் என்பதாகும். இத்திட்டத்தின் மற்றொரு அளப்பரிய பலன் சென்னை நகரும் சுத்தம், சுகாதாரம் அடையும். மேலும் தற்போது சென்னை மாநகராட்சியின் குப்பை சேகரிப்பு கிடங்குகளாகச் செயல்படும் பெருங்குடி, கொடுங்கையூர் ஆகியவற்றால் ஏற்படுகின்ற மாசுக்குறைபாட்டையும் தவிர்க்க முடியும் என்பதாலும், எனக்கு இத்திட்டம் மிகப்பெரிய உத்வேகத்தை அளித்தது. அந்த முயற்சிக்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று பலன் கிடைத்திருக்கிறது.

சென்னை மாநகராட்சி ஆணையர் திரு. ஜி. பிரகாஷ், ‘கிராமப்புற விவசாயிகள் மற்றும் உணவுப் பொருட்கள் தயாரிப்பாளர்களுடன் சென்னை மாநகராட்சி இணைந்து, சென்னை நகரத்தில் தினசரி உருவாகின்ற 5000 டன் கழிவுகளில் இருந்து, மக்கும் கழிவுகளைப் பிரித்து, அதிலிருந்து தரமான இயற்கை உரத்தைத் தயாரித்து, மிகக் குறைந்த விலையில் நகரின் புறநகர் பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு வழங்க முடிவு செய்திருக்கிறது. இத்திட்டத்தின் மூலம் 30,000 ஏக்கர் நிலங்கள் வளம் பெறும் என்றும், மேலும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் ஒரு சிறந்த திட்டமாகவும் அமைகிறது. இந்தியாவிலேயே இது
முதன்முதலாக நிறைவேற்றப்படும் ஒரு முன்மாதிரி திட்டம் என்பதால் தமிழகத்திற்கே பெருமிதம்’ என்றார்.

இந்த திட்டம் மகத்தான வெற்றியடைய வேண்டும் என மனதார வாழ்த்தும் இந்த வேளையில், உரிய முயற்சிகளை மேற்கொண்டு இத்திட்டத்தை சீரிய முறையில் நடைமுறைப் படுத்த உதவியாக இருந்த, இருக்கின்ற, இருக்கப் போகின்ற அத்தனை உள்ளங்களுக்கும் எனது ஆத்மார்த்தமான நன்றிகளையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை மாநகராட்சி ஆணையர் திரு. ஜி. பிரகாஷ் அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்களை உரித்தாக்குகிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img