HomeNews*செம்பி இசை வெளியீட்டு விழா !!!*

*செம்பி இசை வெளியீட்டு விழா !!!*

*செம்பி இசை வெளியீட்டு விழா !!!*
Trident Arts R ரவீந்திரன் மற்றும் ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் அஜ்மல் கான், ரெயா தயாரிப்பில் இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில், கோவை சரளா, அஷ்வின்குமார் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் “செம்பி”. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பத்ம பூஷன் உலகநாயகன் கமல்ஹாசன் தலைமையில், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள கோலகலமாக நடைபெற்றது 
இவ்விழாவினில்..

*தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது…*

பிரபு சாலமன் மீண்டும் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார். எங்கு இப்படியான இடங்களை பிடிக்கிறார் என ஆச்சர்யமாக இருக்கிறது. கோவை சரளா நடிப்பில் மிரட்டியிருக்கிறார். கமல் சார் ஒரு பட விழாவிற்கு வந்தால் அந்தப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும். இந்தப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகள். 
*நடிகை கோவை சரளா பேசியதாவது…*
இந்தப்படத்தின் ஹீரோ பிரபு சாலமன் சார் தான். அவர் படத்தில் நடிப்பது ஈஸி. அவர் சொல்வதை கேட்டு அதை செய்தால் மட்டும் போதும், பிரமாதமாக வந்துவிடும். இங்கு வந்து வாழ்த்திய அனைத்து பெருமக்களுக்கும் என் நன்றிகள். 
*தயாரிப்பாளர் TG தியாகராஜன்…*
இசை விழா நாயகன் நிவாஸ் K பிரசன்னாவிற்கு வாழ்த்துகள். பிரபு சாலமன் மிக அற்புதமான இயக்குநர். அவரது கும்கி படம் பார்த்து அவருடன் வேலை செய்ய வேண்டுமென கேட்டு படம் செய்தோம். இந்தப்படத்தை மிக அற்புதமாக எடுத்திருக்கிறார். கோவை சரளா மிக நன்றாக நடித்திருக்கிறார். படம் வெற்றி பெற என் வாழ்த்துகள். 
*தயாரிப்பாளர் அம்மா T சிவா பேசியதாவது….*

கமல் சார் ஒரு படத்திற்கு வந்தால் அது வெற்றிக்கான அறிகுறி. விக்ரம் மூலம் திரைத்துறையையே மீண்டும் ஜொலிக்க வைத்துள்ளார். பிரபு சாலமன் மிக அற்புதமான இயக்குநர். கோவை சரளா மிகச்சிறந்த நடிகை. மனோரமா ஆச்சிக்கு பிறகு அந்த இடத்தை பிடிக்கும் தகுதி கோவை சரளாவுக்கே உண்டு. பிரபு சாலமன் செய்த அற்புதங்களில் ஒன்று தம்பி ராமையா போன்ற நடிகரை தமிழுக்கு கொடுத்தது. படம் வெற்றி பெற வாழ்த்துகள். 
*திரு அருள்பதி பேசியதாவது…*
விக்ரம் படத்திற்காக கமலுக்கு வாழ்த்துகள். இப்படம் வெற்றி பெற வாழ்த்துகள். 
*இயக்குநர் வசந்தபாலன் பேசியதாவது…*
கமல் சார் இன்னும் எல்லோரையும் இன்ஸ்ஃபையர் பண்ணிக்கொண்டு இருக்கிறார். கமல் சார் போன்ற ஆளுமை கிடைத்தது சினிமாவுக்கு பெருமை. மிகக்குறைந்த பட்ஜெட்டில் மைனா, கும்கி என எடுத்து பிரமிக்க வைக்கிறார் பிரபு சாலமன். வெறும் பறவை பறக்கும் இயற்கையை தான் காட்டுகிறார், தியேட்டர் அதிர்கிறது. அதே போல் கோவை சரளா அவர்கள் பிரமிக்க வைக்கும் நடிப்பை தந்துள்ளார். படம் வெற்றி பெற என் வாழ்த்துகள். 
*இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது…*

கமல் சாருக்கு என்னைவிட தீவிரமான ரசிகன் இருக்க முடியாது. அவரை வைத்து சிங்காரவேலன் படமெடுத்தேன், இன்றும் கொண்டாடும் படமாக இருக்கிறது. அதற்கு காரணம் கமல் சார் தான். அவர் ஒவ்வொரு காட்சியிலும் சின்ன சின்ன நகாசு வேலைகள் செய்து அசத்திவிடுவார். அஷ்வின் அவர்களே கமல் சாரை பார்த்து நடிக்க கற்றுக்கொள்ளுங்கள். தமிழ் சினிமாவில் வெகு சில இயக்குநர்களே இருக்கிறார்கள், அதில் முக்கியமானவர் பிரபு சாலமன். மனோரமா ஆச்சிக்கு பிறகு அந்த இடத்தை நிரப்ப கூடியவர் கோவை சரளா தான். இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துகள். 
*திரு நாஞ்சில் சம்பத் பேசியதாவது..*
இந்தப்படம் ஒரு இயற்கை நாட்டியம், இந்தப்படத்தில் எதிர்க்கட்சிக்காரனாக ஒரு பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்றார் பிரபு சாலமன், அதுவே தான் எனது விருப்பமும். நான் நன்றாக நடித்ததாக கோவை சரளா சொன்னார். அவரை வாழும் மனோரமா என்றார்கள். அவர் ஆளும் மனோரமா. இந்தப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துகள். 
*திரு பழ கருப்பையா பேசியதாவது…*
ஒரு நாள் போன் செய்து இப்படத்தில் நடிக்க வேண்டும் என்றார். நடிக்க வையுங்கள் நான் நடிக்கிறேன் என்றேன். ஒரு காட்சிக்கு ஒரே வசனத்தை பல வடிவங்களில் சொல்லி நடிக்க வைப்பார். அது சரியான வடிவம் பெறும் வரை விட மாட்டார். மிகச்சிறந்த இயக்குநர். படம் வெற்றி பெற ஆதரவு தாருங்கள் நன்றி. 
*கே.பாக்யராஜ் பேசியதாவது…*
கமல் விழாவுக்கு வந்தால் படம் ஜெயிக்கும் என்று இங்கு சொன்னார்கள். அந்த ராசி எனக்கும் இருக்கு அவர் நடித்த 16 வயதினிலே தான் எனக்கும் ஆரம்பம். அந்தப்படத்தில் அவரது திறமையை பிரமித்து பார்த்திருக்கிறேன். அதே போல் கோவை சரளா அவர்களை எட்டு வயதிலிருந்தே எனக்கு தெரியும். முந்தானை முடிச்சு படத்தில் என்னிடம் அடம்பிடித்து நடித்தார். அவரை மனோரமா போல் என்றார்கள் அது உண்மையான கருத்து. இந்தப்படத்தில் நடிப்பில் அசத்தியிருக்கிறார். பிரபு சாலமன் மிகச்சிறந்த இயக்குநர். கும்கி படத்தில் அவரை பார்த்து பிரமித்தேன். இந்தப்படம் டிரெய்லரே அற்புதமாக இருக்கிறது படம் வெற்றி பெற வாழ்த்துகள். 
*Dr.ஐசரி K கணேஷ் பேசியதாவது…*

பிரபு சாலமன் எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர். அவரை வைத்து என் தயாரிப்பு நிறுவனத்தில் படம் செய்ய ஆசைப்பட்டேன். அது வரும் காலத்தில் நடக்கும் என நம்புகிறேன். கோவை சரளா மேடம் இந்தப்படத்தில் அசத்தியிருக்கிறார். டிரெய்லரே படம் நன்றாக இருக்குமென்பதை சொல்கிறது. படம் வெற்றி பெற வாழ்த்துகள். 
*இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் பேசியதாவது…*

Trident Arts R ரவீந்திரன் தயாரிப்பில் முந்தைய படங்கள் பெரிய வெற்றி பெற்றுள்ளன. அது போல் இந்தப்படமும் பெரிய வெற்றி பெறும். உங்களுக்கு கமல் சார் சப்போர்ட் இருக்கிறது. அவரால் நானே தெனாலி படத்தில் தயாரிப்பாளராக மாறினேன். கோவைசரளாவை நாயகியாக்கினார். அது போல் அவர் சப்போர்ட் இருக்கும் போது எளிதாக ஜெயிக்கலாம். இந்தப்படமும் ஜெயிக்கும் வாழ்த்துகள். 
*நடிகர் அஷ்வின் பேசியதாவது…*

படம் பண்ணுவதே எனக்கு பாக்கியம். ரவி சார் எனக்கு முதல் படம் கொடுத்ததோடு இரண்டாவது படமும் கொடுத்தார். பிரபு சாலமன் சார் படம் என்றவுடனே நான் எதுவுமே கேட்கவில்லை. நான் ஓகேவா சார் எனக்கேட்டேன், அவர் எனக்கு செய்ததை திரையில் நீங்கள் பார்ப்பீர்கள். கமல் சார் பக்கத்தில் நிற்பதே பெருமை. அவர் வந்து வாழ்த்தியது மிகப்பெரிய பெருமை. இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி. 
*நடிகர் தம்பி ராமையா பேசியதாவது…*
கமல் சார் கலையின் நாயகன். அவர் இருக்கும் மேடையில் இருப்பது மகிழ்ச்சி. இந்தப்படத்தின் நாயகன் பிரபு சாலமன், நடிப்பு ராட்சசி கோவை சரளா எல்லோருக்கும் நன்றி. படம் வெற்றி பெற ஆதரவு தாருங்கள். 
*இயக்குநர் பிரபு சாலமன் பேசியதாவது…*
படத்தில் என்னுடன் தோள் கொடுத்து உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் பெரும் நன்றி. உங்களால் தான் இந்தப்படம் சாத்தியமானது. இந்தப்படத்தின் பாத்திரத்திற்காக பல காலம் அலைந்திருக்கிறேன். கொடைக்கானலில் இருந்து கொல்லிமலை வரை பலரை தேடினோம் இறுதியில் கமல் சாரின் சதிலீலாவதி ஞாபகம் வந்தது, உடனே கோவை சரளா மேடமை பார்த்து கதை சொன்னேன். என்னால் முடியுமா என்றார்கள், உங்களால் கண்டிப்பாக முடியும் என்றேன் படத்தில் அசத்திவிட்டார். இந்தப் படத்தில் அனைவருமே கடுமையாக உழைத்துள்ளார்கள். இந்தப்படத்திற்கு இசையால் உயிர் கொடுத்த நிவாஸுக்கு நன்றி. ரசிகனின் ரசனையை உயர்த்துகிற கமல் சார் இங்கு வாழ்த்தியது எனக்கு பெருமை. எல்லோருக்கும் நன்றி. 

*நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது…*
கோவைசரளாவை அக்கா, அம்மா என்று கூப்பிடுகிறார்கள், நான் என்ன சொல்வது என தெரியவில்லை. சரளா பாப்பாவை எனக்கு நன்றாக தெரியும். இதில் நன்றாக நடித்துள்ளார். எட்டு வயது பாப்பாவும் தயக்கமில்லாமல் நடித்துள்ளார். பலருக்கு இது வராது. கேமரா ஆன் பண்ணியவுடன் அழுகை சிரிப்பு எதுவும் வராது. என்னையே திட்டியிருக்கிறார்கள். நடிப்பு வாய்ப்பு தேடும் காலத்தில் என்னையே பலர் திட்டியிருக்கிறார்கள். என்ன சார் கோவணம் எல்லாம் கட்டிக்கிட்டு என சொன்னார்கள். ஆனால் இப்போது அதை கொண்டாடுகிறார்கள் அதைக்கேட்க சந்தோஷமாக இருக்கிறது. ஒரு படம் பெரிய படமா சின்ன படமா என்பது காலம் கடந்து பேசப்படுவதில் தான் இருக்கிறது. இப்போது 16 வயதினிலே படத்தை பேசுகிறார்கள், அது தான் பெரிய படம். இத்தனை கோடியில் எடுத்தோமே அது என்ன படம் எனக்கேட்டால் அது பெரிய படம் இல்லை. கொடைக்கானலில் மிக நல்ல லொகேஷன்களில் எடுத்திருக்கிறார். நான் படம் பார்த்து விட்டேன். தப்பு நடக்கும்போது நாம் கேள்வி கேட்க தயங்குவதை தைரியமாக பேசியுள்ளதென்பதால் எனக்கு மிகவும் பிடித்த படம். ரசிகர்கள் நல்ல படத்தை பாராட்ட வேண்டும் படம் நல்லாயில்லை என்றாலும் தைரியமாக சொல்ல வேண்டும். அப்போது தான் சினிமா வளரும். நல்ல படத்திற்கு என் ஆதரவு எப்போதும் இருக்கும். பெரும் திறமையாளர்கள் என் கண் முன்னால் வாய்ப்பில்லாமல் அழிந்து போயிருக்கிறார்கள், அதனால் நல்லவற்றை பாராட்ட தயங்காதீர்கள். கற்றுக்கொள்ள தயாராக இருங்கள். அஷ்வின் நன்றாக நடித்திருக்கிறார். தம்பி ராமையா அசால்ட்டாக நடித்திருக்கிறார். நான் ரசித்து பார்த்தேன். நாஞ்சில் நடிப்பும் பிரமாதமாக இருந்தது. கேமரா மிக அற்புதமாக இருந்தது. அனைவருக்கும் என் வாழ்த்துகள். நல்ல படம் வெற்றிப்படம் என்பதை ரசிகர்களே முடிவு செய்வார்கள். செம்பி மிகப்பெரிய வெற்றி பெறும், வாழ்த்துகள். 

Must Read

spot_img