நடிகர் ஆர்யா கடந்த 20 வருடங்களாக தமிழ் திரை உலகில் தாக்குப்பிடித்து நிற்கிறார். சாக்லேட் பாயாக அவர் நடித்த பல படங்கள் அவருக்கு கை கொடுக்காவிட்டாலும் அவ்வப்போது ஒரு சில படங்கள் அவரது நடிப்பிற்காகவும் கதைக்காகவும் பேசப்பட்டு அவரை திரை உலகில் தொடர்ந்து பயணிக்க வைத்து வருகின்றன.
அப்படி ஒரு படம் தான் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை. இந்த படத்தின் கதை, கதைக்களம், இதில் நடித்த நடிகர்கள் மற்றும் ஆர்யாவின் வித்தியாசமான கெட்டப், நடிப்பு என எல்லாமே பக்காவாக ஒன்று சேர்ந்து இந்த படத்தை மிகப்பெரிய வெற்றிப் படமாக ஆக்கியது.
இதனை தொடர்ந்து எல்லா வெற்றி படங்களுக்கும் இரண்டாம் பாகம் எடுக்கும் பேச்சு தலை தூக்குவது போல, கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படுவதாக ஒரு அறிவிப்பு வெளியானது. பாலிவுட்டை சேர்ந்த பிரபல நிறுவனங்கள் இயக்குனர் பா.ரஞ்சித்தின் நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்க இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது.
இந்த நிலையில் பாலிவுட்டை சேர்ந்த அந்த பிரபல நிறுவனம் ஒன்று திடீரென இதிலிருந்து தற்போது பின்வாங்கியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சார்பட்டா பரம்பரை இரண்டாம் பாகத்தை துவங்குவதில் ஒரு தேக்க நிலை ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.